சென்ற மாதம் கோவைக்கு சென்றிருந்தேன். அங்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. பேருந்தில் ஏறியதும் எனக்கு ஆச்சர்யம். நடத்துனர் இரண்டு ரூபாய் பயனச்சீட்டுக்களையும் வைத்திருந்தார். எனது ஊர் மதுரை. இங்கு நாங்கள் இரண்டு ரூபாய் பயணச்சீட்டை பார்த்து ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தை முழுவதும் தமிழகம் தான் நடத்துகிறதா? என்று சந்தேகம் எழுகின்றது. பயணக்கட்டணம் மாநிலம் முழுவதும் ஒன்றாக தானே இருக்க வேண்டும். கோவையில் அந்த இரண்டு ரூபாய் பயச்சீட்டை வாங்கிக்கொண்டு அரைமணி நேரம் பேருந்து பயணம் செய்யமுடிந்தது. மதுரையில் நடை முறையில் உள்ள பயணக்கட்டணத்தை வெளிஊர்காரர்கள் அறிந்து கொள்ள இங்கு எழுதுகிறேன். குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய். சாதாரண பேருந்துகளை மதுரையில் இப்போதெல்லாம் பார்க்கவே முடியாது. வெறும் ஒரு சதவிகித பேருந்துகள் மட்டுமே இன்னும் சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு சாதாரண பேருந்தில் 3 ரூபாய் கட்டணம். சிட்டி எக்ஸ்பிரஸ் என்று கூறப்படும் பேருந்துகளுக்கு 5 ரூபாய் கட்டணம். தாழ் தள சொகுசுப்பெருந்துகளுக்கு 7 ரூபாய் கட்டணம். பெரும்பாலும் தாழ்தள சொகுசுப்பெருந்துகள் தான் ஓடுகின்றது. நூற்றுக்கு என்பது சதவிகிதம் சொகுசுப்பெருந்துகள் தான் மதுரையில் ஓடுகின்றது. ஒரு பதினைந்து சிட்டி எக்ஸ்ப்ரஸ்கள் ஓடலாம். வெறும் ஐந்து தான் சாதாரண பேருந்துகள் ஓடுகின்றன. அதையும் பண்டிகை போன்ற காலங்களில் சிட்டி எக்ஸ்ப்ரஸ் என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி சிட்டி எக்ஸ்ப்ரஸ்களாக ஆக்கி விடுகின்றனர். ஆக 3 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தூரத்தை மக்கள் 7 ரூபாய் கொடுத்து கடக்கவேண்டியிருக்கின்றது. சொகுசுப்பெருந்துகளும், சிட்டி எக்ஸ்ப்ரஸ்களும் சாதாரண பேருந்துகளைப்போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழ் நாட்டில் அனைவரும் சொகுசு வாழ்க்கையா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? சொகுசுப்பேருந்து வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களிடம் யார் அழுதது? அரசுப்பேருந்துகளில் தான் இது போன்ற பகல் கொள்ளை நடக்கின்றது என்று தனியார் பேருந்துகளை எதிர்பார்க்கலாம் என்றால், சிற்றுந்து எனப்படும் மினி பஸ்களைத்தவிர மற்ற தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. அந்த சிற்றுந்துகளும் மிகவும் சொற்ப எண்ணிக்கைகளில் தான் ஓடுகின்றது. அந்த சிற்றுந்துகளின் பேருந்து நடத்துனர்களின் தொல்லையும் தாங்க முடியவில்லை. இரு வேறு நிறுவனங்களின் சிற்றுந்து பேருந்து நடத்துனர்கள் நடுரோட்டில் சண்டை இட்டுக்கொள்வதும் வாடிக்கை ஆகி விட்டது. ஏன் மாநிலம் முழுவதும் ஒரே போக்கை கடைபிடிக்கவில்லை? இந்த மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தவர்களா? நாங்கள் மட்டும் தான் இளிச்சவாயர்கள் போல.
Showing posts with label coimbatore. Show all posts
Showing posts with label coimbatore. Show all posts
Saturday, July 10, 2010
Monday, June 14, 2010
ஆட்சியாளர்களே சிந்தியுங்கள்
இன்றைக்கு கோவைக்கு சென்றிருந்தேன். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டைப்பற்றி விளம்பரங்களை எங்கும் காண முடிந்தது. நான் சென்ற பேருந்தில் கூட செம்மொழி மாநாட்டுப்பாடலை அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நமது தமிழ் மொழிக்காக ஒரு உலகளாவிய மாநாடு நடக்கப்போகின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் வளர்த்த மதுரையில் நடத்தினால் நன்றாக இருந்திருக்கும் என்ற அலை பலரிடம் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எப்படியோ தமிழ் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நம் தமிழுக்கான, தமிழை பெருமை படுத்தக்கூடிய ஒரு விஷயம் நடந்தாலும் அது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை தரக்கூடிய ஒன்று தான். செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை முழுவதும் பராமரிப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தது. நடைபாதை சீரமைப்பது, குப்பைகளை அகற்றி சீர் படுத்துவது என்று எங்கு பார்த்தாலும் நகரை சீர் செய்யக்கூடிய வேலை நடந்துகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. செம்மொழி மாநாட்டை ஒட்டி உலகத்தின் பல இடங்களில் இருந்து கோவைக்கு மக்கள் வரும்போது நம் ஊரை அழகாக வைத்திருக்க வேண்டும் தான். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அங்கேயே வாழும் மக்களின் இது போன்ற அடிப்படை தேவைகளை மாநாட்டை அறிவித்த பிறகு தான் கவனித்திருக்கின்றது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மற்ற மாநிலத்தவர், மற்ற நாட்டவர் முன்பு நம் ஊர் அழகாக இருக்க வேண்டும் தான். ஆனால் இதே அக்கறையை மக்களின் மீதும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏதாவது மாநாடு, தலைவர்கள் வருகையின் பொது தான் மக்களின், அந்த ஊரின் அடிப்படை தேவைகளையும் கவனித்து அதை ஏற்படுத்திக்கொடுப்பது என்பது ஒரு ஆரோக்யமான அரசுக்கு அழகா? ஆட்சியாளர்கள் என்று கூறுவது தற்போதய ஆட்சியாளர்களை மட்டும் கூறுவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். சமீப காலமாக ஏற்பட்ட மற்ற ஆட்சிகளும் இதே முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ, இது போன்ற விஷயத்தில் பெரும்பாலும் அனைத்து ஆட்சியாளர்களும் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்களே. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மன நிலையை ஆட்சியாளர்கள் எப்போது பெறுவார்களோ? ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?
Subscribe to:
Posts (Atom)