Saturday, July 10, 2010
நாங்கள் தான் இளிச்சவாயர்கள்!
Monday, May 31, 2010
பயணம்
என் உடன் கல்லூரியில் நான்கு வருடம் படித்த, நான் ஆசையாய் தங்கை என்று அழைக்கும் அனுஷாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்கு இன்று செல்லலாம் என்று நினைத்தேன். 14 .05 .2010 காலை 6 மணி. அனுஷாவை தொலைபேசியில் அழைத்து “நான் இன்று வரலாமா? அல்லது வெளி அலுவல்கள் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அனுஷாவும் தன் அம்மாவிடம் கேட்டுவிட்டு இன்று வேறு அலுவல்கள் இல்லை. வரலாம் என்றும் கூறினார்கள். அதன் பின் புறப்படத்தயார் ஆனேன். அவர்கள் பகுதியில் காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் தடை இருப்பதால் 12 மணிக்கு மேல் அங்கு சென்று சேர்வது போல கிளம்பலாம் என்று நினைத்தேன். ஆனால் தங்கையின் அன்பு உத்தரவினால் 10 மணிக்கே அங்கு செல்வது என்று முடிவெடுத்தேன். “சட்டைய அயர்ன் பண்ணிட்டியா?” இது என் அம்மாவின் குரல். “இதோ பண்ணிட்ருகேம்மா” என்று கூறிக்கொண்டே சட்டையை அயர்ன் செய்துவிட்டு மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து கொண்டு இரண்டொரு தோசையை வாயில் திணித்துக்கொண்டு பேருந்தை பிடிப்பதற்காக ஓடினேன். என் ஓட்டத்திற்கு பலனும் கிடைத்தது. ஒரு வழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தேன். “ஒரு பெரியார் பஸ் ஸ்டாண்ட் குடுங்க” – பெரியார் பஸ் ஸ்டாண்டையே வாங்குவது போன்ற தொனியில் நடத்துனரிடம் பத்து ரூபாயை நீட்டினேன். பத்து ரூபாயை பார்த்த உடனே முகத்தை சுளித்துக்கொண்டு “சில்ர இல்லையா பா. எல்லாரும் பத்து பத்து ரூபாயா நீட்னா நான் சில்றைக்கு எங்க போறது?” என்று அவரது ஆற்றாமையை என்னிடம் கொட்டி தீர்த்தார். “நாங்க என்ன சில்ர வைச்சுகிட்டா தாரமாட்றோம்” என்று எனக்குள் நினைத்துக்கொண்டு அவர் கொடுத்த கிழிந்த பயணச்சீட்டையும் கிழியாத ஐந்து ரூபா நோட்டையும் வாங்கிக்கொண்டேன். அனுஷாவின் வீட்டிற்குசென்று எப்படி நடந்து கொள்ள வேண்டும என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்போது மல்லிகைப்பூ சாக்கு மூட்டையுடன் மூன்று பேர் ஏறினார்கள். அவர்களின் கண்களில் அந்த காலையிலும் ஒரு களைப்பு . அதிகாலையிலே எழுந்து பூ சந்தைக்கோ வேறு எங்கோ சென்று திரும்பிக்கொண்டிருக்கக்கூடும். எல்லோரையும் போல “பாவம்” என்று நினைத்துக்கொண்டு அவர்களின் ருசிகர சைகை விளையாட்டை ரசிக்கத்தொடங்கினேன். பெரியார் பேருந்து நிறுத்தமும் வந்து விட்டது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். நான் செல்ல வேண்டிய பேருந்துகள் எந்த நடைபாதை அருகில் வந்து நிற்கும் என்பது தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாமா என்று எண்ணிக்கொண்டு அருகில் இருந்த போக்குவரத்து அதிகாரியை நெருங்கினேன். அதற்குள் தகவல் பலகை ஒன்று கண்ணில் பட்டது. “பிளாட்பாரம் நம்பர்: 1 நிற்கும் பேருந்துகள்” என்று இருந்த அந்த தகவல் பலகையில் நான் செல்ல வேண்டிய பேருந்துகள் நிற்கும் என்ற செய்தி இருந்தது. இங்கு தான் நிற்கும் என்று உறுதிபடுத்திக்கொண்டு காத்திருந்தேன். வெகு நேரம் ஆனா பிறகும் நான் செல்ல வேண்டிய பேருந்துகள் ஒன்று கூட தென்படாததால் ஒரு சிறு சந்தேகம் எழத்தொடங்கிய நேரத்தில் அந்த பேருந்து வந்து நின்றது. கூட்டம் அதிகம் இல்லாததால் கொஞ்சம் நிம்மதியுடன் பேருந்தில் ஏறி பயணச்சீட்டை பெற்றுக்கொண்டேன். “ஹாஸ்பிட்டலுக்கு ரெண்டு ஸ்டாப் தள்ளி தான் அந்த ஸ்டாப்” என்று தந்தை சொல்லி அனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது. ஹாஸ்பிடல் நிறுத்தத்தை கடந்த உடன் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் எது என்று தேடத்தொடங்கினேன். நடத்துனரிடமே கேட்டுவிடவேண்டியது தான் என்று முடிவு செய்து நடத்துனரின் இருக்கைக்கு அருகில் சென்று அமர்து கொண்டு “ஸ்டாப் எப்ப வரும்” என்று கேட்டேன். “ரெண்டு ஸ்டாப் தள்ளி. சொல்றேன்” என்று கூறிக்கொண்டே அவரது கணக்குகளை சரிபார்துக்கொண்டிருந்தார். ஒரு வழியாக நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி அவர்களின் வீட்டை சென்று அடைந்தேன். அனுஷாவும் அவரது(எங்களது) அம்மாவும் வரவேற்றார்கள். எங்கோ அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த நேரத்திலும் “சும்மா ஜம்மு னு இருக்கார்ல” என்று தமாஷ் செய்து விட்டு கிளம்பினார் அப்பா.
…முற்றும்
கதை அல்ல நிஜம்!
ஒரு உண்மை சம்பவத்தை உங்களுக்காக எழுதுகிறேன். நானும் என் அண்ணனும் ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு தினேஷ் என்ற நண்பன் இருந்தான். தினேஷின் அண்ணன் ராஜேஷ். ராஜேஷும் என் அண்ணனும் நண்பர்கள். நங்கள் படித்த பள்ளியில் ராஜேஷ் படிப்பில் முதல் மாணவராக இருந்தார். அனைத்து பாடங்களிலும் அனைத்து தேர்விலும் முதல் மதிப்பெண் அவர் தான் பெறுவார். தினேஷ் ராஜேஷின் சகோதரர்களின் தந்தை ஒரு காவல் துறை அதிகாரியாகப்பணி புரிந்தார். தந்தை காவலராக இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளான அந்த சகோதரர்கள் மிகவும் சாதுவானவர்களாக இருந்தார்கள். ராஜேஷும் பன்னிரெண்டாம் வகுப்பை நல்லபடியாக முடித்து மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் பிரிவை எடுத்தார(2003). இந்த நிலையில் ராஜேஷின் தந்தையார் காலமானார். அவர்களின் தாய்க்கு ராஜேஷும் தினேஷும் தான் கதி என்ற நிலை இருந்தது. ராஜேஷின் முதல் அரை ஆண்டும் முடிந்தது. இரண்டாம் அரை ஆண்டு முதல் அவரவர்களின் துறை வகுப்பிற்கு செல்வார்கள். ராஜேஷும் சென்றார். புதிய நண்பர்கள். பள்ளியை போலவே கல்லூரியிலும் நல்ல முறையில் பயின்று குடும்பத்தை காபற்றுவார் என்று ராஜேஷின் தாய் நினைத்து கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை ராஜேஷின் தாய்க்கு ஒரு போன் அழைப்பு. அதில் ஒரு தாங்கும் ஹோட்டலின் காப்பாளர் பேசினார். உங்கள் மகன் ராஜேஷ் எங்கள் ஹோட்டல் அறையை இன்று வாடகைக்கு எடுத்தார். சற்று நேரத்துக்கு முன்பு எங்கள் ஹோட்டல் அறையில் உங்கள் மகன் தனக்கு தானே எலெக்ட்ரிக் ஷாக் வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்பது அந்த காப்பாளரின் செய்தி. ராஜேஷின் தாய் கதறினார். ராஜேஷின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்த பின்பு கிடைத்த தகவல் இன்னும் கொடுமையானதாக இருந்தது. ராஜேஷின் குரல் பெண் குரல் போல இருப்பதாக உடன் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கிண்டல் செய்தது தான் ராஜேஷின் தற்கொலைக்கு கரணம் என்று தெரிய வந்தது. அவர்களுடைய கிண்டலை தாங்க முடியாமல் ஏதோ ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று ஒரு ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தன உடம்பு முழுவதும் மின் வயர்களை சுற்றிக்கொண்டு தன் மீது மின்சாரத்தை பாய்ச்சி இறந்து விட்டார். எவ்வளவு கொடுமை பாருங்கள். அவரது மனம் எவ்வளவு பாடு பட்டிருந்தால் இப்படி ஒரு கொடுமையான தற்கொலையையும் தேர்ந்து எடுத்திருப்பார்.
மற்றவர்கள் மனதை புண் படுத்தி அதில் சுகம் காணும் இது போன்ற மாணவர்களை குற்றம் சொல்வதா?
இல்லை மற்றவர்களின் கேளிக்கைக்கு மரியாதை கொடுத்து தன் தாயையும் தம்பியையும் எண்ணிப்பார்க்காமல் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அந்த ராஜேஷை குற்றம் சொல்வதா?
இல்லை மாணாக்கரின் இது போன்ற செயல்களை முன்கூட்டியே கண்டு கண்டிக்காத தியாகராஜர் பொறியியற் கல்லூரியை குற்றம் சொல்வதா?
யாரை குற்றம் சொன்னாலும் ராஜேஷும் திரும்பி வரப்போவதில்லை. அந்த தாயின் கதறலுக்கு விடை கிடைக்கப்போவதும் இல்லை. இந்த சம்பவத்தை படித்த பின்பாவது இது போன்ற எண்ணம் இருக்கும் ஒரு சிலராவது திருந்துவார்கள் என்ற எண்ணத்தில் எழுதி இருக்கிறேன். நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் தான். ஆனால் இந்த விதத்தில் அல்ல.
இந்த நேரத்தில் அந்த ராஜேஷ் அன்னனனுடன் நான் கழித்த நேரங்களை, நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டையும் எண்ணிப்பார்க்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.