Saturday, July 10, 2010
நாங்கள் தான் இளிச்சவாயர்கள்!
Monday, May 31, 2010
மின் வெட்டுக்கு நன்றி!
மின் வெட்டு!
இது கடந்த ஒரு ஆண்டாகவே அனைத்து தரப்பு மக்களையும் அதிருப்தி அடையச்செய்த ஒரு விஷயம். மின்சாரம் என்பது நமக்கு அவ்வளவு இன்றியமையாதது ஆகிவிட்டது. சென்ற வாரம் ஒரு குடிசை வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்முடைய ஒரு படுக்கை அறையின் அளவு கூட இருக்காது அவர்களது மொத்த வீட்டின் அளவு. அந்த சிறிய இடத்திற்குள் தான் தூங்குவது, சமையல் அறை, உடை மாற்றும் அறை, பூஜை அறை, இன்னும் பல. குடிசைக்கு உள்ளே இருந்தே வானத்தை பார்க்கும் அளவிற்கு மேலே ஆங்காங்கே ஓட்டைகள். அரசாங்கத்தின் புண்ணியத்தில் இலவச மின்சாரம் கிடைத்த அந்த வீட்டில் ஒரு பல்பு மட்டும் தன்னால் முடிந்த அளவு வெளிச்சத்தை கக்கிக்கொண்டிருந்தது. ஆனால் இலவச மின்சாரம் கிடைகாததர்க்கு முன்னால் காத்து புகமுடியாத அளவு நெருக்கமாக இருந்த அந்த குடிசைப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் மின் விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தால் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு புரியும். நம் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அதற்கே நமக்கு எத்தனை கோவம். வடமாநிலங்களில் பதினாறு மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கிறது என்று செய்தித்தாள் ஒன்றில் படித்து அதிர்ந்து போனேன். மின் வெட்டை மூன்று மணி நேரமே நம்மால் தாங்கமுடியவில்லை அவர்கள் பதினாறு மணி நேரம் எப்படித்தான் தாங்குகிறார்களோ, அங்கு எப்படி தான் நிறுவனங்கள் இயங்குகின்றனவோ என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. தான் சுகமாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது உள்ள பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. இது தவறு என்று கூறமுடியாது. என்றாலும் மற்றவர்களையும் பற்றி சிந்திப்பதே மனித தன்மையாகும். என்றாலும் மனிதத்தன்மை இல்லாமல் மின் வெட்டுக்கான காரணத்தை ஆளுங்கட்சி எதிர்கட்சி மீதும் எதிர்கட்சி ஆளுங்கட்சி மீதும் தூக்கிப்போட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. எப்படியோ இந்த மின் வெட்டு என்பது பாமரர்களின் வாழ்க்கையை அனைவருக்கும் எடுத்துக்காட்டியிருக்கும் பாமரர்களின் வாழ்க்கையை அனைவரையும் மூன்று மணி நேரமாவது வாழ வைத்திருக்கும்.
என் அருமை மின் வெட்டுக்கு நன்றி.
கதை அல்ல நிஜம்!
ஒரு உண்மை சம்பவத்தை உங்களுக்காக எழுதுகிறேன். நானும் என் அண்ணனும் ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்கு தினேஷ் என்ற நண்பன் இருந்தான். தினேஷின் அண்ணன் ராஜேஷ். ராஜேஷும் என் அண்ணனும் நண்பர்கள். நங்கள் படித்த பள்ளியில் ராஜேஷ் படிப்பில் முதல் மாணவராக இருந்தார். அனைத்து பாடங்களிலும் அனைத்து தேர்விலும் முதல் மதிப்பெண் அவர் தான் பெறுவார். தினேஷ் ராஜேஷின் சகோதரர்களின் தந்தை ஒரு காவல் துறை அதிகாரியாகப்பணி புரிந்தார். தந்தை காவலராக இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளான அந்த சகோதரர்கள் மிகவும் சாதுவானவர்களாக இருந்தார்கள். ராஜேஷும் பன்னிரெண்டாம் வகுப்பை நல்லபடியாக முடித்து மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் பிரிவை எடுத்தார(2003). இந்த நிலையில் ராஜேஷின் தந்தையார் காலமானார். அவர்களின் தாய்க்கு ராஜேஷும் தினேஷும் தான் கதி என்ற நிலை இருந்தது. ராஜேஷின் முதல் அரை ஆண்டும் முடிந்தது. இரண்டாம் அரை ஆண்டு முதல் அவரவர்களின் துறை வகுப்பிற்கு செல்வார்கள். ராஜேஷும் சென்றார். புதிய நண்பர்கள். பள்ளியை போலவே கல்லூரியிலும் நல்ல முறையில் பயின்று குடும்பத்தை காபற்றுவார் என்று ராஜேஷின் தாய் நினைத்து கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை ராஜேஷின் தாய்க்கு ஒரு போன் அழைப்பு. அதில் ஒரு தாங்கும் ஹோட்டலின் காப்பாளர் பேசினார். உங்கள் மகன் ராஜேஷ் எங்கள் ஹோட்டல் அறையை இன்று வாடகைக்கு எடுத்தார். சற்று நேரத்துக்கு முன்பு எங்கள் ஹோட்டல் அறையில் உங்கள் மகன் தனக்கு தானே எலெக்ட்ரிக் ஷாக் வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்பது அந்த காப்பாளரின் செய்தி. ராஜேஷின் தாய் கதறினார். ராஜேஷின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்த பின்பு கிடைத்த தகவல் இன்னும் கொடுமையானதாக இருந்தது. ராஜேஷின் குரல் பெண் குரல் போல இருப்பதாக உடன் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கிண்டல் செய்தது தான் ராஜேஷின் தற்கொலைக்கு கரணம் என்று தெரிய வந்தது. அவர்களுடைய கிண்டலை தாங்க முடியாமல் ஏதோ ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று ஒரு ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தன உடம்பு முழுவதும் மின் வயர்களை சுற்றிக்கொண்டு தன் மீது மின்சாரத்தை பாய்ச்சி இறந்து விட்டார். எவ்வளவு கொடுமை பாருங்கள். அவரது மனம் எவ்வளவு பாடு பட்டிருந்தால் இப்படி ஒரு கொடுமையான தற்கொலையையும் தேர்ந்து எடுத்திருப்பார்.
மற்றவர்கள் மனதை புண் படுத்தி அதில் சுகம் காணும் இது போன்ற மாணவர்களை குற்றம் சொல்வதா?
இல்லை மற்றவர்களின் கேளிக்கைக்கு மரியாதை கொடுத்து தன் தாயையும் தம்பியையும் எண்ணிப்பார்க்காமல் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அந்த ராஜேஷை குற்றம் சொல்வதா?
இல்லை மாணாக்கரின் இது போன்ற செயல்களை முன்கூட்டியே கண்டு கண்டிக்காத தியாகராஜர் பொறியியற் கல்லூரியை குற்றம் சொல்வதா?
யாரை குற்றம் சொன்னாலும் ராஜேஷும் திரும்பி வரப்போவதில்லை. அந்த தாயின் கதறலுக்கு விடை கிடைக்கப்போவதும் இல்லை. இந்த சம்பவத்தை படித்த பின்பாவது இது போன்ற எண்ணம் இருக்கும் ஒரு சிலராவது திருந்துவார்கள் என்ற எண்ணத்தில் எழுதி இருக்கிறேன். நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் தான். ஆனால் இந்த விதத்தில் அல்ல.
இந்த நேரத்தில் அந்த ராஜேஷ் அன்னனனுடன் நான் கழித்த நேரங்களை, நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டையும் எண்ணிப்பார்க்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.