Wednesday, June 30, 2010

ஆண் உரிமை? பெண்ணுரிமை?

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று கூறிக்கூறி இப்பொழுது ஆண் வர்கத்தின் உரிமை கேள்விக்குறி ஆகி விட்டது. ஈவ் டீசிங் என்று ஒரு சட்டம் இருக்கின்றது. ஆடம் டீசிங் என்று ஒரு சட்டம் இருக்கின்றதா? பெண்கள் மட்டும் என்று பேருந்துகள் இயக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆண்கள் மட்டும் என்று பேருந்துகள் ஓடுவதாக இன்று வரை நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள். பெண்களுக்காக மட்டும் என்று பலப்பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆண்களுக்கு மட்டும் என்று இது வரை எந்த நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. சமீபத்தில் தான் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் ஆண்களுக்காக மட்டும் என்று கண்ணில் பட்டது. இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கலாமே என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்றுக்கொள்ள அருகில் உள்ள ஒரு ஹிந்தி பயிற்ருவிக்கும் இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு அவர்கள் சொன்ன பதில். "சாரி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் தான் கற்றுத்தருவோம்" என்று. பண்டைய காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் இப்பொழுது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். இருந்தாலும் தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிக்கூறி முதலைக்கண்ணீர் வடித்து தங்களின் தேவயைத்தீர்த்துக்கொள்கின்றார்கள் என்பது எனது கருத்து. ஒட்டு மொத்த பெண்களையும் குற்றம் சொல்வதாக என்ன வேண்டாம். நான் சொல்வது ஒரு சில பெண்களை மட்டும் தான். ஆண்களில் ஒரு சிலர் போக்கிலிகளாக இருப்பதை போன்று பெண்களிலும் ஒரு சிலர் இருக்கின்றார்கள் என்பது உண்மையே. எற்றுக்கொள்ளவேண்டியதும் கூட. ஆனால் பெண்கள் என்ற புனிதமான போர்வையால் அந்த ஒரு சிலர் மூடப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆண்களின் உரிமையை பற்றி பேசுவதற்கும் நிறைய இருக்கின்றது. இப்படி மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் விளைவு தான் என்ன? நேர விரயமும், நட்பு, ஒற்றுமை சீர்குலைவது மட்டும் தான். ஆண் உரிமை, பெண் உரிமை என்று தங்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டுவதில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக மனிதநேயத்தை வளர்ப்பதிலும், ஒற்றுமையை வளர்ப்பதிலும் நேரத்தை செலவிட்டால் அனைவரும் செழிப்புறலாம்.

Tuesday, June 29, 2010

நீதித்தராசு

சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் ஒன்று தான் என்று பல வாசகங்களை (வசனங்களை) கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? வி.ஐ.பி என்று கூறப்படும் முக்கியப்புள்ளிகளுக்கு உள்ள சட்டமும் பாமரருக்கு உள்ள சட்டமும் ஒன்றாக உள்ளதா? சிறைச்சாலையில் கூட வி.ஐ.பி க்களுக்கு என்று அனைத்து வசதிகளும் நிறைந்த சிறைகள் உள்ளதாக கேள்விப்படுகிறோம். அப்படி அனைத்து வசதிகளும் உடைய இடத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு பண விரயத்தை ஆக்குவதற்கு பதிலாக அந்த வி.ஐ.பி க்களை வீட்டிலேயே விட்டு விடலாமே. வி.ஐ.பி க்கள் சிறைவாசத்தின் பொது மற்ற கைதிகளைப்போல சிறையினுள் வேலை கூட செய்வது கிடையாது. இது தான் நீதித்தராசின் லட்சணமா? சமீபத்தில் இந்து மத போதகர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே போன்ற வழக்கு ஒரு பாமரன் மீது சுமத்தப்பட்டிருந்தால் அந்த பாமரனை இந்த சட்டம் என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் அந்த மத போதகருக்கோ, உண்ண பழங்கள், அவர் விருப்பப்ப்படும்படியான உணவு என பல சௌகர்யங்களை செய்து கொடுத்திருக்கிறது. இந்த சௌகர்யங்களை மற்ற கைதிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை? பணம் விளையாடுகின்றது என்பதை மக்களுக்கு இப்படி தெளிவாக வெளியில் காட்டும் அளவுக்கு நம் நாடு வளர்ந்து விட்டது (?) மக்களால் என்ன செய்ய முடியும்? யார் கேள்வி கேட்பார்கள் என்ற உணர்வு. இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் இதன் விளைவு என்ன ஆகும் என்பது கணித்துப்பார்த்தாலே பயங்கரமாக இருக்கின்றது. தவறு செய்தவனும் தன் பண பலத்தைக்கொண்டு அனைத்து சௌகர்யங்களையும் அனுபவித்துக்கொண்டு சுக வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பான். பாவப்பட்ட பாமரர்கள் செய்த குற்றத்திற்கோ செய்யாத குற்றத்திற்கோ உள்ளே வதைபட்டு, சிதைபட்டு வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டுருப்பர். நீதித்தராசு பணக்கட்டுகளின் பக்கம் சாய்ந்துகொண்டிருக்கின்றது என்பது அப்பட்டமாக தெரிகின்றது. விடிவு காலம் எப்பொழுதோ?

Monday, June 14, 2010

ஆட்சியாளர்களே சிந்தியுங்கள்

இன்றைக்கு கோவைக்கு சென்றிருந்தேன். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டைப்பற்றி விளம்பரங்களை எங்கும் காண முடிந்தது. நான் சென்ற பேருந்தில் கூட செம்மொழி மாநாட்டுப்பாடலை அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நமது தமிழ் மொழிக்காக ஒரு உலகளாவிய மாநாடு நடக்கப்போகின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் வளர்த்த மதுரையில் நடத்தினால் நன்றாக இருந்திருக்கும் என்ற அலை பலரிடம் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எப்படியோ தமிழ் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நம் தமிழுக்கான, தமிழை பெருமை படுத்தக்கூடிய ஒரு விஷயம் நடந்தாலும் அது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை தரக்கூடிய ஒன்று தான். செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை முழுவதும் பராமரிப்பு பணிகள் நடந்துகொண்டிருந்தது. நடைபாதை சீரமைப்பது, குப்பைகளை அகற்றி சீர் படுத்துவது என்று எங்கு பார்த்தாலும் நகரை சீர் செய்யக்கூடிய வேலை நடந்துகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. செம்மொழி மாநாட்டை ஒட்டி உலகத்தின் பல இடங்களில் இருந்து கோவைக்கு மக்கள் வரும்போது நம் ஊரை அழகாக வைத்திருக்க வேண்டும் தான். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அங்கேயே வாழும் மக்களின் இது போன்ற அடிப்படை தேவைகளை மாநாட்டை அறிவித்த பிறகு தான் கவனித்திருக்கின்றது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மற்ற மாநிலத்தவர், மற்ற நாட்டவர் முன்பு நம் ஊர் அழகாக இருக்க வேண்டும் தான். ஆனால் இதே அக்கறையை மக்களின் மீதும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏதாவது மாநாடு, தலைவர்கள் வருகையின் பொது தான் மக்களின், அந்த ஊரின் அடிப்படை தேவைகளையும் கவனித்து அதை ஏற்படுத்திக்கொடுப்பது என்பது ஒரு ஆரோக்யமான அரசுக்கு அழகா? ஆட்சியாளர்கள் என்று கூறுவது தற்போதய ஆட்சியாளர்களை மட்டும் கூறுவதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். சமீப காலமாக ஏற்பட்ட மற்ற ஆட்சிகளும் இதே முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். எதில் ஒற்றுமையாக இருக்கிறார்களோ இல்லையோ, இது போன்ற விஷயத்தில் பெரும்பாலும் அனைத்து ஆட்சியாளர்களும் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்களே. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மன நிலையை ஆட்சியாளர்கள் எப்போது பெறுவார்களோ? ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?

Thursday, June 10, 2010

கடவுள் வியாபாரம்

காலை  நேரத்தில்  டிவி ரிமோட்டில்  சேனல்  மாற்றும்  விளையாட்டை  விளையாடிப்பாருங்கள் . ஒவ்வொரு  சேனலிலும்  பலப்பல  மதத்தாரும்  பலப்பல  சாமியார்களும்  தங்கள்  தங்கள்  கடவுள்களைக்  கூவிக்  கூவி  விற்றுக்கொண்டிருப்பார் . முக்காடு  போட்டு  பெண்களும் , கோட்  சூட்  போட்ட  ஆண்களும் , மாலையும்  கழுத்துமாய்  சாமியார்களும் . இப்படிப்  பலர்  காவி , வெள்ளை , சிவப்பு  என்று  கலர்  கலராய்  தோன்றி  தங்கள்  கடவுளை  எப்படியாவது  பூலோகத்தை  கைப்பற்ற  வேண்டும்  என்ற  வெறியுடன்  பாடி  ஆடி  கத்தி  பலப்பல  மொழிகளில்  சமய  வியாபாரம்  செய்து  கொண்டிருப்பார்கள் . மதம் , கடவுள்  இவை  வியாபாரம்  செய்யவேண்டிய  ஒன்றா ? மக்களே திருந்துங்கள்.

வாஸ்தவமான வாஸ்து

வாஸ்து  ஒரு   கடல். அந்த  கடலில்  எந்த  அலையும்  தெரியாத  அரை  குறைகள்  எல்லாம்  இன்று  ஊரையே  பைத்தியம்  ஆக்கிக்கொண்டு  இருக்கிறார்கள்.
மனை  அடி  சாஸ்திரத்தில்  16 அடி  மிகுந்த செல்வம், 12 அடி  செல்வம்  குழைந்து  போகும்  என்று  போட்டிக்கும். இந்த  அடி  அங்குலம்  என்பதெல்லாம்  பின்னால்  வந்த  கணக்கு. எனவே, இந்த  16 அடி, 12 அடி  என்பதெல்லாம்  ஸ்கேல்  அடி  அல்ல. வீட்டு  எஜமானர்  கால்  அடி. அவர்  காலால்  16 அடி  நடக்க  அது  தான்  மனை  அடி  சாஸ்திரம்  என்று  ஒரு  வாஸ்து  நிபுணர்  சொல்கிறார். 16 அடி ஸ்கேல் வைத்து  கட்டியவன்  கதி  என்னாவது? இந்த  தியரி  உண்மை  என்றல்  அப்பா  தனது  காலடியில்  16 அடி  பார்த்த  வீட்டில்  அப்பா  இறந்து  மகன்  எஜமானன்  அனால்  வாழ  முடியாதா? என்ற  கேள்வி  எழும். ஆனால்  அப்பா  பிள்ளை  உடல்  வாகு  ஒரே  மாதிரி  இருக்க  அதிக  வாயப்பு  உண்டு  என்று  வாஸ்து  பதில்  சொல்லும்.
வாஸ்து  ஒரு  சயின்ஸ். அதை  நான்  மறுக்க  வில்லை. அதன்  அறிவியல்  கூறுகளை  உணருவது  அவசியம். ஒரு  முக்கியமான  விளக்கம். கேரளாவில்  மலையாளத்தில்  வாஸ்து  நூல்  உண்டு. அப்படியே  அந்த்ராவில்   கர்நாடகத்தில்  அந்த  அந்த  மொழியில்  எழுத பட்டுள்ளது அந்தரா  வாஸ்துவை  தமிழ்நாட்டில்  அப்ளை  பண்ணகூடாது. கேரளா  வாஸ்து  தமிழ்  நாட்டுக்கு  பொருந்தாது. சின்ன  சின்ன  வேறுபாடுகள்  மண்ணின்  தட்ப  வெப்பம் , நீரோட்டம் , கடல்  உயரம்  காரணமாக  ஏற்படும்  இவையெல்லாம்  உளறுகிற  உள்ளூர்  வஸ்துவுக்கு  உரைக்கவா  போகிறது ? தமிழ்  நாட்டு  வாஸ்து  நிபுணர்கள்  மேற்கே  இருந்து  கிழக்கே  தண்ணீர்  ஓட்டம்  இருக்க  வேண்டும்  என்பார்கள் . ஏன்  தெரியுமா ? நமது  நதிகள்  எல்லாம்  மேற்கே  உற்பத்தியாகி  கிழக்கே  வங்காள  விரிகுடாக்கடலில் கலப்பவை . ஆனால்  கேரளாவுக்கு  இந்த  வாஸ்து  பொருந்தாது . அங்கே  நதிகள்  கிழக்கே  உண்டாகி  மேற்கே அரபிக்கடலில்  கலக்கின்றன . அங்கு  நீரோட்டம்  கீழ்  மேல் . தமிழ்  நாட்டில்  மேல்  கீழ் . அது  மாதிரியே  மழை  வெயில்  கணக்கு  பார்த்து  வீடுகட்ட  இலக்கணம்  வகுத்தனர்  முன்னோர்கள் . இப்போது  எந்த  தர்ம  நியாமும்  இல்லாத  ப்ளாட்ஸ்  வந்துவிட்ட  பிறகு  எதை  அளவுகோலாய்  வைத்து   பேச ... எழுத ...?
பூமி  வடகிழக்கில்  சற்று  சாய்ந்த  நிலையில்சுழலுவதால் வடகிழக்கில்  பாரம்  கூடாது  என்பது  பொதுவான  வாஸ்து . இந்தியாவில்  வடக்கு  நோக்கிய  காந்த  ஈர்ப்பு  இருப்பதால்  பூஜை  அறை  வடக்கு  நோக்கி  இருப்பது  த்யனத்துக்கு  நல்லது . இது  இந்தியாவுக்கு  பொருந்தும் . ரஸ்சியாவுக்கு   பொருந்தாது . நம்  உள்ளூர்  வாஸ்து  ரஷ்சியா   போய்  இதையே  உளறுவது  அசிங்கமாக  இல்லையா ? வடக்கு  ஞான  திசை  என்பதால்  தெற்கு  பார்த்து  அலமாரி வைத்தால்  கொஞ்சம்  சில்லறை  சேர  சான்ஸ்  உண்டு. இந்த  யோசனை  சீனாவுக்கு  செல்லாது.
காற்றோட்டம், வெப்ப ஓட்டம், சூரிய உதயம், நீரோட்டம்  இவற்றை  கணக்கிட்டு  வீடு  கட்டுவது  அவசியம். பூமியை  தூண்டும்போது  சக்தி  அலை  சரியாக  துண்டடப்படுவது  அவசியம். எல்லாவற்றையும்  விட  என்னத்தூயமையுடன்  தருமம்  சிதறாமல்  வாழ்ந்தால்  எந்த  வீடும்  நல்ல  வீடு  தான்.
பஞ்ச பாண்டவருக்கு வாஸ்து சாஸ்திரம் தோற்றுவித்த மாயன் கட்டிகொடுத்த மாளிகையில் பாண்டவர்கள் வாழ முடிந்ததா? 13 வருடம் காட்டிலும்  மேட்டிலும்  பிச்சை  அல்லவா  எடுத்தார்கள்? வாஸ்து அவர்களை  வாழ  விட்டதா? வாஸ்து  சாஸ்திர  பகவான் மாயனே  கட்டினாலும் தருமத்துக்கு  விரோதமாக  சூதாடத் துணிந்ததால்  சாஸ்திரத்தை  விட  தர்ம  சாஸ்திரம்  வலிமையானது. வாசலையும் ஜன்னலையும் மாற்றினால் துயரங்கள் தீராது. வாழ்வையும் எண்ணங்களையும் மாற்றுங்கள். வாஸ்தவமான வாஸ்து அதுதான்.
-சுகி சிவம்

Wednesday, June 9, 2010

பூச்சாண்டி காட்டாதீர்கள்

நம் அன்றாட நாளிதகழ்களையோ அல்லது செய்திகளையோ பார்த்தால் அதில் கண்டிப்பாக முக்கால் பகுதி பிடித்துக்கொள்வது அந்த தலைவர் இந்த தலைவர் மீது குற்றச்சாட்டு சாட்டினார், இவர் அவர் மீதி குற்றம் சுமத்தினார், ஆர்பாட்டம், போராட்டம் என்பது தான். ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் இதனால் ஆகிவிடப்போவது ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத்தெரியும். இந்த தலைவர் அந்த தலைவர் மீதி குற்றம் சுமத்துகிறார் என்றால் அப்படி அந்த தலைவர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அதற்கு இந்த தலைவர் வழக்கு தொடரலாமே. இது ஒரு புறம் இருக்க, மக்களின் குறையை ஆதரித்து எதிர்கட்சிகள் செய்வது ஆர்பாட்டம், போராட்டம். இந்த இரண்டினால் பாதிக்கப்படுவது மறுபடியும் அதே பொது மக்கள் தானே. மக்களின் குறையை ஆளும் கட்சி தீர்த்து வைக்காததால் முழு அடைப்பு என்று போதாது குறைக்கு எதிர்கட்சி வேறு மக்களுக்கு துன்பம் தரும். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல. பாமர மக்கள் தங்கள் குறை தீர என்ன வழி என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, அதை எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போக்கு தானே சமீபகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது? உண்மையிலேயே மக்களுக்கு நல்லவை செய்யவேண்டும் என்று எதிர் கட்சிகள் நினைத்தால், நுகர்வோர் நீதிமன்றம், நீதிமன்றம், தொண்டு அமைப்பு, மனித உரிமைகள் கழகம் என்று பல உள்ளனவே. அதில் எதை நாட வேண்டுமோ அதை நாடி மக்களுக்கு நன்மையை செய்திருக்கலாமே. ஏன் இப்படி மக்கள் மீது அன்பு இருப்பது போல பூச்சாண்டி காட்டுகிறார்கள்? அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கூற்று உண்மையாவது எப்பொழுதோ!!!

காருக்குள் விஷ(ய)ம்

காருக்குள் இப்பொழுது பெரும்பாலும் ஏ.சி வைத்திருக்கிறார்கள். எனவே காரின் சன்னல்கள் எப்பொழுதும் மூடியே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்கும். காருக்குள் சென்ற உடன் சன்னல்கள் அனைத்தையும் மூடிவிட்டு ஏ.சி போடுவதை தவிர்த்து விடுவது நல்லது. பூட்டிய காருக்குள் பென்சீன் எனப்படும் வாயு இருக்கும். அது விஷத்தன்மயானது. எனவே காருக்குள் சென்ற உடன் இரண்டு நிமிடங்களாவது சன்னல்களை திறந்து வைத்து விட்டு பிறகு மூடிக்கொள்வது உங்களின் உடல் நலனைக்காக்கும். விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படாமல் தடுக்கும். இது மருத்துவர்கள் தந்த தகவல்களாக இன்று ஒரு ஏட்டில் படித்தேன். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவளைச்சொல்லுங்கள். உங்களுக்கு இல்லாவிட்டாலும், உங்கள் நண்பருக்கோ அல்லது அவரது நண்பருக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, June 6, 2010

சூரியன் நாளை முதல் மேற்கில் உதிக்கும்

மீடியா எனப்படும் செய்தி தொடர்புத்துறைக்கு எனது வேண்டுகோளாக இதைப்பதிவு செய்கிறேன்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு செய்தி தொடர்பு துறை வழியாகத்தான் கிடைக்கிறது. "ஆங்கோர் அநியாயம் நடந்தது" என்பதை நாம் கண்கூடாக நேரடியாக பார்ப்பதில்லை. பத்திரிக்கையிலோ அல்லது தொலைக்காட்சி, வானொலி செய்திகளின் மூலமாகவே அறிந்துகொள்கிறோம். நம் நண்பர் சொல்லி கூட நம்பாத ஒன்றை பத்திரிகை செய்திகள் கூறினால் உடனே நம்பிவிடுகிறோம். "சூரியன் நாளை முதல் மேற்கில் உதிக்கும்" என்று பத்திரிகையில் செய்தி வந்தால் என்ன, ஏது, எப்படி என்று கூட ஆராயாமல் அடுத்தநாள் மேற்கில் இருந்து உதிக்கப்போகும் சூரியனை பார்க்க குடும்பத்தோடு மொட்டை மாடியில் அதிகாலையிலே காத்திருக்கும் ஆட்கள் தான் நாம். அப்படி நம் அறிவுக்குள் ஒன்றிப்போன செய்தித்துறை அதன் கடமையைச் சரியாக செய்கின்றதா என்பது கேள்விக்குறி தான். ஒரு சில செய்தி நிறுவனங்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்தி வருகிறதென்பதும் மறுப்பதற்கில்லை. கடமையைச்சரியாக செய்யும் செய்தி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் வெறும் வியாபார நோக்கத்திற்காகவே செய்தி நிறுவனங்களை நடத்தி வருபவர்களை கண்டிக்க வேண்டியதும் நமது கடமையாக இருக்கிறது. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வியாபாரம் கருதியே செய்திகளை வெளியிடுகின்றன. தற்போது உள்ள சூழலில் எந்த செய்தியை வெளியிட்டால் நிறைய லாபம் கிடைக்கும் என்று மட்டுமே சிந்திப்பவர்களாக நிறுவன தலைமை அலுவலர்கள்  இருக்கின்றார்கள். உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் சில நாட்கள் கழித்து அப்போதைக்கு எந்த செய்தியை வெளியிட்டால் அதிக லாபம் கிடைக்குமோ அது போன்ற செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். சில காலம் கழித்து முன்பு வெளியிட்ட அந்த அக்கிரமத்தை பற்றிய செய்தியே வராமல் போய்விடுகின்றது. உதாரணமாக லலித் மோடி, நித்தியானந்தா, ஈழத்தில் தமிழர்களின் நிலை, கேத்தன் தேசாய் போன்ற விவகாரங்களை ஒரு வாரமோ பத்து நாளோ முக்கியச்செய்தியாக வெளியிடுவார்கள். அதன் பிறகு அது என்னவாயிற்று என்று கூட தெரியாது. செய்தித்துறையின் மூலம் மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டுமானால் ஒரு விவகாரம் எழுந்தால் அது முழுமையாக முடியும் வரை செய்தித்துறை அந்த விவகாரத்தை துரத்திக்கொண்டே இருக்கவேண்டும். செய்தித்துறையின் பார்வை விலகாதவரை அந்த விவகாரங்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் ஓரளவு நேர்மையாக நடத்தப்படும். எனவே வியாபாரத்திற்காக மட்டும் இல்லாமல் மக்களின் தேவையை உணர்ந்து மக்களின் தோழனாக செய்தித்துறை பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.

Thursday, June 3, 2010

ஒழிக்க முடியாத(?) லஞ்சம்

லஞ்சம் என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிகாலை மார்க்கெட் பகுதியில் போலீசாரால் வியாபாரிகளிடம் வாங்கப்படும் லஞ்சத்தை, ஒவ்வொரு சாலை சிக்னலிலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வாங்கப்படும் லஞ்சத்தை, லஞ்சம் வாங்கிக்கொண்டபிறகு தான் புகாரை பதிவு செய்யும் காவல் நிலையங்களை, அரசு அலுவலகங்களில் வாங்கப்படும் லஞ்சத்தை, லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதும் நீதிபதிகளை(!), அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்தை இது வரை எந்த ஒரு லஞ்ச ஒழிபபுத்துறையினரும் காணவில்லையா? லஞ்சத்தை முழுவதுமாக ஒழிக்க முதலில் சிறிய அதிகாரிகளிடம் இருந்து ஒடுக்க வேண்டுமா அல்லது உயர்மட்டத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் லஞ்சமாக வாங்கும் பணம் அதிகரித்துக்கொண்டு தானே இருக்கின்றது. சாமானியரால் என்ன செய்ய முடியும்? இது தான் நம் கேள்வியாக இருக்கின்றது. லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒரு முறையாவது சொல்லி இருக்கிறோமா அல்லது லஞ்சத்தை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகாராவது தெரிவித்து இருப்போமா? நம் சுயநலத்திற்காக நாம் நலமாக இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய வாரிசுகளுக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டு செல்கிறோம் என்று எண்ணுபவர்களுக்கு என்னுடைய கருத்தும் புரியும்.

இடி மழை மின்னல்!

மின்னலின் தாக்கங்கள் பற்றி சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். பல பயனுள்ள தகவல்களை அதன் மூலம் அறிந்து கொண்டேன். "இடி விழுந்து இறந்து போய்டான்" என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் அது மின்னல் விழுந்து இறந்ததை தான் அப்படி சொல்கிறார்கள் நம் மக்கள். மின்னல் தாக்கி ஏற்படும் இறப்பை தவிர்க்க முடியாது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் எந்த ஒரு அழிவு இயற்கையினால் வருவதற்கு முன்பும் இயற்க்கை ஒரு எச்சரிக்கை செய்கிறது. நமக்கு தான் அது புரிவதில்லை. மின்னல் வருவதற்கு முன்பும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதைப்பற்றி தான் அந்த தொலைகாட்சியில் அந்த நிகழ்ச்சி இருந்தது. அதில் வழங்கப்பட்ட தகவல்களை இங்கு உங்களுக்கு தருகிறேன். மின்னல் தாக்கவிருக்கும் இடத்தில் நாம் இருந்தால் மின்னல் தாக்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு நம்முடைய கைகளில் இருக்கும் முடிகள் நேராக எழுந்து நிற்க ஆரம்பிக்கும். அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டால் அந்த இடத்தை விட்டு உடனே அகல வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில் கூட்டமாக இருப்பதையும் தவிர்க்கவேண்டும். மின்னல் நமக்கு அருகில் தாக்கும் பட்சத்தில் தரையோடு தரையாக உட்கார்ந்து விடுவது நல்லது. உட்காரும்போது இரு கைகளும் காதுகளை மூடியவாறு இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். பாதத்தின் முன் பகுதி மட்டும் தரையில் படுவது போல உட்கார வேண்டும். மார்புப்பகுதி காலோடு ஒட்டி இருக்க வேண்டும். அதாவது நம் உடலை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவரை மின்னல் தாக்கி இருந்தால் அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் கொடுத்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.